Monday 20 April 2015

பிஎஸ்என்எல் அதிகாரிகள்- ஊழியர்கள் வேலைநிறுத்தம் இன்று துவக்கம்






பிஎஸ்என்எல் அதிகாரிகள்- ஊழியர்கள் வேலைநிறுத்தம் இன்று துவக்கம்

சென்னை, ஏப். 20 -
பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நடத்தும்நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தம், செவ்வாயன்று துவங்குகிறது. இந்த வேலைநிறுத்தத்தில், இரண்டரை லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.“பிஎஸ்என்எல் நிறுவனத்தைக் பாதுகாப்போம்“ என்ற முக்கியமான முழக்கத்தையும், இதையொட்டி பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து 2 நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், நாட்டுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வரும் நிலையில், மத்திய ஆட்சியாளர்கள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமாக, வேண்டுமென்றே பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஒழித்துக் கட்டும்நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தனியார் நிறுவனங்களுடன் போட்டிபோடவும், அவர்களுக்கு இணையான தரத்துடன் சேவைகளை வழங்கவும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு, நவீன கருவிகள் தேவைப்படுகின்றன.
ஆனால், இக்கருவிகளை வாங்கவிடாமல் பல்வேறுவகையில் தடையையும், தாமதத்தையும் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் பல ஆயிரம் கோடிரூபாய் லாபமீட்டி வந்த பிஎஸ்என்எல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. வியாபார ரீதியாக லாபம் தராத தரைவழி தொடர்புகளால் வரும் இழப்பை, உறுதியளித்தபடி ஈடுகட்ட முன்வராத மத்திய அரசு,மாறாக, ஏற்கெனவே 12 ஆயிரம் கோடி ரூபாய் கடனுடன் உள்ள எம்டிஎன்எல் நிறுவனத்தை பிஎஸ்என்எல்-உடன் இணைக்கும் வேலையை செய்துள்ளது.
தகவல் கோபுரங்களைப் பிரித்து தனி நிறுவனமாக்கவும் முடிவு செய்துள்ளனர்.அதேபோல பிஎஸ்என்எல் நிறுவனத்தில், முடிவெடுக்க வேண்டிய மட்டத்தில் உள்ள பல்வேறு அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்பாமல், நிர்வாகத்தை சீர்குலைக்கும் வேலையையும் செய்து வருகின்றனர்.எனவே, பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களை இணைக்கக் கூடாது, பிஎஸ்என்எல் நிறுவனம் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு எதிரான அமெரிக்க நிறுவனமான டீலாய்ட்டி குழுவின் பரிந்துரைகளை புறக்கணிக்க வேண்டும்;
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு எதிரான தொலைத் தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவுகளை அமல்படுத்தக்கூடாது; பிஎஸ்என்எல் நிறுவனத்தை நலிவடையச் செய்யும் நோக்கில் தகவல் கோபுரங்களைப் பிரித்து தனிநிறுவனமாக்கக் கூடாது; மருத்துவப்படி உள்ளிட்ட நிறுத்தப்பட்ட சலுகைகளை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியக் கொள்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அதிகாரிகள் ஊழியர்கள் இணைந்து, நாடு முழுவதும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினர். சுமார் 25 லட்சம் கையெழுத்துக்களைப் பெற்று, அவற்றை கடந்தபிப்ரவரி 25-ம் தேதி நாடாளுமன்றத்திற்கு பேரணியாக சென்று, பிரதமர் அலுவலகத்தில் அளித்தனர்.இதன் அடுத்தகட்டமாக தற்போது ‘பிஎஸ்என்எல் நிறுவனத்தை காப்போம்’ என்ற முழக்கத்துடன் ஏப்ரல் 21, 22 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை நடத்துகின்றனர்.
தீக்கதிர் 21/4/2015

No comments:

Post a Comment