Tuesday 29 April 2014

மே தினம்

மே தினம் - வரலாற்று நிகழ்வு

அமெரிக்கத் தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ போராளிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக, உழைப்பாளர்களின் தினமாக நம் முன் நிற்கிறது. இப்படியாக, பொதுவுடைமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டி வரும் அமெரிக்காவில்தான் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை முதன் முதலில் நிலைநாட்டப்பட்டது என்பது வரலாறு காட்டும் பாடம் ஆகும். எங்கு அழுத்தம் அதிகமாகிறதோ அங்கு நிச்சயம் புரட்சி வெடித்துக் கிளம்பும்.

பெற்ற சுதந்திரம் பறி போகிறது !

நேற்று வரை நம் முன்னோர்களின் தியாகத்தால் நாம் பெற்ற இந்த 8 மணி வேலை என்ற சுதந்திரம் , இப்போது ஏகாதிபத்திய அரசுகளால், முதலாளித்துவ சக்திகளால், பன்னாட்டு நிறுவனங்களால், நம்மை அடகு வைக்கும் ஆளும் நாலாந்தர அரசியல் வாதிகளால் படிப்படியாகப் பறிக்கப் படுகிறது. 10 மணி நேரம் , 12 மணி நேரம் நீ வேலை செய்தால் என்ன என்று நம்மிடமே கொடூர எண்ணம் கொண்ட அதிகாரிகளால் இன்று தைரியமாக கேட்கப் படுகிறது . மீண்டும் அடிமைச் சாசனம் எழுதப் படுகிறது.

மீண்டும் புரட்சிக்கு தயாராவீர் !

இதிலிருந்து நாம் மீள வேண்டுமானால் , பெற்ற சுதந்திரம் பறிபோகாமல் காக்கப் படுமானால் என்ன தியாகத்திற்கும் நாம் தயாராக வேண்டும். தொழிற் சங்கம் என்ன செய்தது என்று கேட்பதை விட்டு , நாம் என்ன செய்ய வேண்டும் என்ற உணர்வு ஒவ்வொரு தோழனிடமும் வெடித்துக் கிளம்ப வேண்டும். அதிகார மிரட்டலுக்கு அடி பணியாது , தண்டனை களுக்கு பயந்து ஓடாது , போராட்ட குணம் வளர்க்கப் பட வேண்டும். தொழிலாளர் சக்தி அற்ப எண்ணங்களுக்காக பிரிக்கப்படாமல் , ஒன்று படுத்தப் படவேண்டும். மீண்டும் வரலாற்றுப் போருக்கு இளைஞர்களை நாம் தயார் செய்திட வேண்டும் . இதுவே மே தின தியாகிகளுக்கு நாம் செய்திடும் உண்மையான அஞ்சலி ஆகும்.

மே தின தியாகிகள் நினைவு ஓங்கட்டும் !
புரட்சிக்கான சிந்தனை பெருகட்டும்!


No comments:

Post a Comment