Wednesday 14 March 2018

போய்ட்டு வாங்க சார்.......

*செத்தா செத்ததுதான், நோ சொர்க்கம்.. நோ நரகம்.. மறக்க முடியாத ஹாக்கிங்.*

*Stephen Hawking*

*நன்றி  One India Tamil வலைப்பதிவு.*

*லண்டன்:*

உலகத்தில் உள்ள அத்தனை சோம்பேறிகளும் படிக்க வேண்டிய பாடம் ஸ்டீபன் ஹாக்கிங். *எதுவுமே செய்யாமல் முடங்கிப் போகும் மனிதர்களுக்கு மத்தியில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய உந்து சக்தியாக திகழ்ந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங்.*

எதையுமே அறிவியல் பூர்வமாக மட்டுமே பார்க்கக் கூடியவர் ஹாக்கிங். *நீ சீக்கிரம் செத்துப் போய் விடுவாய் என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர் ஹாக்கிங். அவருக்கு அப்போது 21 வயதுதான். மோட்டார் நியூரான் பாதிப்புக்குள்ளாக்கி சக்கர நாற்காலியில் முடங்கியது அவரது வாழ்க்கை. ஆனால் அவர் முடங்கவில்லை.*

மரணத்துக்கே தண்ணி காட்டி வந்தவர். அசாத்தியமான புத்திசாலி. "*மரணம் பற்றி எனக்குக் கவலை இல்லை. அது நிச்சயம் ஒரு நாள் வரும். ஆனால் அது வருமே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கப் போவதில்லை. எனக்கு நிறைய வேலை இருக்கிறது."* என்று கூறியவர் ஹாக்கிங்.

மறு பிறவி. சொர்க்கம், நரகம்..இவையெல்லாம் நிஜமா.. நாம் இறந்த பின்னர் என்ன ஆவோம்.. எங்கு போவோம்... நமது உயிர் என்னாகும்.. ஆவி, பேய் உண்டா.. இதற்கெல்லாம் விடை தெரியாமல் அத்தனை பேருமே அலை பாய்ந்தபடிதான் உள்ளோம். ஆனால் இது எதுவுமே கிடையாது. *இறப்போடு எல்லாம் முடிந்து போய் விடும்* என்று அடித்துக் கூறியவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

*மறு பிறவி கிடையாதுங்க.*

மரணம்தான் இறுதியானது. மறு பிறவி என்பதோ சொர்க்கம் என்பதோ கிடையாது என்றும் ஹாக்கிங் திட்டவட்டமாக கூறியவர்.*அதெல்லாம் ஜாலிக்காக பரப்பப்பட்ட கட்டுக்கதைகள் என்றும் ஹாக்கிங் கூறியுள்ளார்.* மக்களின் மரண பயத்தை போக்கவே இதுபோன்ற கதைகளை சிலர் கிளப்பி விட்டதாகவும், அதுவே வழி வழியாக மக்களின் நம்பிக்கையாக மாறிப் போய் விட்டதாகவும் கூறுகிறார் ஹாக்கிங்.

*மூளை இருக்கும் வரைதான்.*

இதுகுறித்து ஹாக்கிங் ஒரு முறை கூறுகையில் மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே. அது செயலிழந்து விட்டால் அனைத்தும் முடிந்து போய் விடும். அதன் பிறகு எதுவுமே கிடையாது.

"*நான் கடந்த 49 வருடமாக மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்.எனக்கு மரண பயம் சுத்தமாக இல்லை. ஆனால் மரணிக்க நான் அவசரப்படவில்லை.நிறைய செய்ய வேண்டும் நான் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறேன்.பல விஷயங்களை நான் இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை. அதையெல்லாம் செய்ய வேண்டும்."*

*சொர்க்கமும் இல்லை நரகமும் இல்லை.*

மூளையும் ஒரு கம்ப்யூட்டர் போலத்தான். எப்படி கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் செயலிழந்தால் அது செயலிழந்து போகுமோ அதுபோலத்தான் மூளையும். *மூளை செயலிழந்து விட்டால் அவ்வளவுதான். அனைத்தும் முடிந்து விடும். அதன் பிறகு எதுவுமே இல்லை. மரணம்தான் இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும் கிடையாது.*

*கட்டுக்கதைகள்.*

மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது கற்பனையானது. கட்டுக்கதை அது. மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள் அவை என்றவர் ஹாக்கிங். *இதுகுறித்து தனது The Grand Design என்ற நூலிலும் விரிவாகப் பேசியுள்ளார் ஹாக்கிங்.*

என்னதான் இயல்பாக ஹாக்கிங் மரணத்தை அவரைப் போலவே நமது மனம் ஏற்றுக் கொண்டாலும் கூட இன்னும் சில காலம் இவர் வாழ்ந்திருக்கலாம் என்ற நப்பாசை ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை

*நமது காலத்தில் நாம் சந்தித்த மாபெரும் ரோல் மாடல் ஹாக்கிங்.. போய்ட்டு வாங்க சார்.*

No comments:

Post a Comment