Sunday 6 November 2016

அனைவருக்கும் நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துக்கள் !


அனைவருக்கும் நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துக்கள் !





ரஷ்யப் புரட்சி ஏற்றி வைத்த அறிவுதீபம்
என்.ராமகிருஷ்ணன்
நூறு ஆண்டுகளுக்கு முன்பு இதே நவம்பர் மாதம் 7ஆம் தேதியன்று வெற்றி பெற்ற மகத்தான ரஷ்யப் புரட்சியானது உலகின் தொழிலாளி வர்க்கத்திற்கும், உழைக்கும் மக்களுக்கும் அளப்பரிய பங்காற்றியுள்ளது. அன்று விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில ஏகாதிபத்திய நாடுகளைத் தவிர இதர நாடுகள் அனைத்துமே அந்த ஏகாதிபத்திய நாடுகளின் அடிமை நாடுகளாக இருந்தன. அந்த அடிமை நாடுகள் சுதந்திரம் பெற ரஷ்யப் புரட்சியால் உருவான சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் மகத்தான உதவி புரிந்தது. அந்த நாடுகளின் தொழிலாளி வர்க்கமும், இதர உழைப்பாளி மக்களும், சுதந்திர வேட்கை கொண்டோரும் அரசியல் உணர்வு பெற்று வர்க்கப் போராளிகளாக மாற, தேச விடுதலையில் நாட்டம் கொண்ட தேசபக்த வீரர்களாக மாற அந்த நாடுகளில் மார்க்சியக் கருத்துக்களைப் பரப்பி கோடிக்கணக்கான மக்களை எழுச்சிகரப் பாதைக்கு கொண்டு வர சோவியத் நாடு மார்க்சிய நூல்களை உலகின் பிரதான மொழிகளில் கோடிக்கணக்கில் அச்சிட்டு, மகத்தான உதவி புரிந்தது. அது சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, சோவியத் அரசாங்கம் மற்றும் சோவியத் மக்களின் மாபெரும் பங்களிப்பு மட்டுமல்ல, மாபெரும் தியாகமும் ஆகும். ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டைக் கொண்டாடும் இந்நாளில் அந்த லட்சியப் பணியை நினைவு கூர்வது மிகவும் பொருத்தமானதே.ரஷ்யப் புரட்சி வெற்றி பெற்று லெனின் தலைமையில் புரட்சி அரசாங்கம் அமைந்தபின், அந்த அரசாங்கம் ஐரோப்பாவில் கார்ல் மார்க்சும், பிரெடரிக் ஏங்கெல்சும் எழுதியவற்றை சேகரிக்க முடிவு செய்தது. அன்று சோவியத் நாடு, உள்நாட்டு எதிர்ப்புரட்சி சக்திகளின் சதி வேலைகளையும், ஜெர்மனி போன்ற நாடுகளின் படையெடுப்பையும் எதிர்நோக்கி இருந்த ஆபத்தான நிலைமையில், இந்த எழுத்துப்பணி சேகரிப்பு துவங்கியது. 1924 ஆம் ஆண்டில் லெனின் மறைந்த பின், சோவியத் நாட்டிற்கும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஜே.வி.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அவரது வழிகாட்டலின் கீழ் இந்த எழுத்துச் சேகரிப்பு பணி தொடர்ந்தது.
மார்க்ஸ் முடிவு
1883 ஆம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் தன் கடைசி மகள் எலியனாரை அழைத்து தனது உடல் நிலை காரணமாக தான் இனி எதுவும் செய்ய இயலாது, எனவே தன்னுடைய கையெழுத்துப் பிரதிகள், குறிப்புகள் அனைத்தையும் ஏங்கெல்சிடம் ஒப்படைத்து விடும்படி கேட்டுக் கொண்டார். மார்க்ஸ் மறைந்த பின், அவரது புதல்வி தன் தந்தை கேட்டுக் கொண்டபடியே அனைத்தையும் ஏங்கெல்சிடம் ஒப்படைத்துவிட்டார். அதில் ‘மூலதனம்’ நூலின் இரண்டாவது, மூன்றாவது பகுதிகளுக்கான குறிப்புகள் இருந்தன. அதில் மார்க்சுக்கு ஏங்கெல்ஸ் எழுதிய நூற்றுக்கணக்கான கடிதங்களும் இருந்தன. ஏங்கெல்ஸ், மார்க்ஸ் குறிப்புகளை சரிசெய்து, கூடுதல் விபரங்கள் கொடுத்து ‘மூலதனம்’ நூலின் இரண்டாவது, மூன்றாவது பகுதிகளை முடித்து வெளியிட்டார். இதற்கே பல ஆண்டுகள் அவர் செலவிட வேண்டியிருந்தது. அத்துடன் தத்துவ அறிஞர் பாயர்பாக் குறித்து மார்க்ஸ் எழுதியவற்றையும் வெளியிட்டார்.
ஏங்கெல்ஸ் முடிவு
1895ஆம் ஆண்டில் ஏங்கெல்சுக்கு தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டது. அச்சமயத்தில் அவர் தன்னிடம் இருந்த குறிப்புகள் அனைத்தையும் பிரித்து, மார்க்ஸ் தனக்கு எழுதிய கடிதங்கள், அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகள், மார்க்சுக்குதான் தான் எழுதிய கடிதங்கள் அனைத்தையும் எலியனார் மார்க்சிடம் கொடுத்துவிட்டார். தனது கட்டுரைகள் மற்றும் தனது குறிப்புகள் ஆகியவற்றை ஜெர்மன் தொழிலாளர் கட்சிக்கு கொடுத்துவிட்டார். சிறிது காலத்தில் ஏங்கெல்ஸ் மரணமடைந்தார். சிறிது காலம் கழித்து எலியனாரும் இறந்துவிட்டார். எனவே மார்க்சின் எழுத்துக்கள் அனைத்தும் மறைந்த அவருடைய மூத்த புதல்வி ஜென்னிலாங்கேயின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.இப்போது, மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் எழுதியவற்றைத் தேடிவந்த சோவியத் குழுவினர் ஜென்னிலாங்கேயின் குடும்பத்தாரை பிரான்சில் தேடி, மார்க்சின் பேரன் சார்லஸ் லாங்கேயைச் சந்தித்தனர். மார்க்சின் குறிப்புகள், அவர் எழுதிய கடிதங்கள். ஏங்கெல்ஸ் எழுதிய கடிதங்கள் அனைத்தும் அவரிடம் இருந்தன. அவற்றை அவர்கள் சேகரித்தனர். அதே போன்று, ஜெர்மன் தொழிலாளர் கட்சியிடம் இருந்த ஏங்கெல்சின் எழுத்துக்களைச் சேகரித்தனர். அதே போன்று, மார்க்சின் சமகாலத்தவர்கள் எழுதிய குறிப்புகள், அவர்களுக்கு மார்க்சும் ஏங்கெல்சும் எழுதிய கடிதங்கள் மற்றும் அவர்களிடமிருந்த மார்க்ஸ், ஏங்கெல்சின் கையெழுத்துப் பிரதிகள் போன்றவற்றை இந்தக் குழுவினர் சேகரித்தனர். மேலும் மார்க்ஸ் , ஏங்கெல்ஸ் எழுதிய கட்டுரைகளையும் புத்தகங்களையும் இவர்கள் சேகரித்து, மாஸ்கோவில் இருந்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவிற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த மார்க்சிய அறிஞர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதியவற்றை ஆராய்ந்து, அவற்றிற்கு குறிப்புகள் சேர்த்து வெளியிட ஆரம்பித்தனர். மார்க்ஸ் துவக்கம் முதல் இறுதி வரை ஜெர்மன் மொழியிலேயே எழுதியிருந்தார். ‘தத்துவத்தின் வறுமை’ நூலை மட்டும் முதலில் பிரெஞ்சு மொழியில் எழுதியிருந்தார். ஏங்கெல்ஸ் ஜெர்மன், ஆங்கிலம் உள்ளிட்டு பல மொழிகளில் எழுதியிருந்தார். இவற்றையெல்லாம் இந்த அறிஞர் குழுவினர் ஆங்கிலம், ரஷ்ய மொழிகளில் மொழியாக்கம் செய்து முதன்முறையாக அவற்றை வெளியிட்டனர்.இவ்வாறுதான் 1845-46 - ஆம் ஆண்டுகளில் மார்க்சும் ஏங்கெல்சும் முதன்முறையாக கூட்டாக எழுதிய மார்க்சியத் தத்துவத்தை விளக்கும் ஜெர்மன் தத்துவம் என்ற நூலை 1932 ஆம் ஆண்டில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிய - லெனினிய கழகம் முதன்முறையாக வெளியிட்டது. அதே போன்று, காரல் மார்க்ஸ் 1843 ஆம் ஆண்டில் எழுதிய ‘ஹெகல் தத்துவத்திற்கு ஒரு விமர்சன ரீதியான பங்களிப்பு’ என்ற நூலையும் இதே கழகம் வெளியிட்டது. அதே போன்று, மார்க்சின் ‘பொருளாதார தத்துவக் குறிப்புகள்’ என்று அவர் எழுதிய நூலும் 1932ஆம் ஆண்டில்தான் மாஸ்கோவில் வெளியிடப்பட்டது. இதன் பின்னர் மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் நூல்கள் மாஸ்கோவின் அயல்மொழி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன. (1960 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் அவை மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகம் என்ற அமைப்பால் வெளியிடப்பட ஆரம்பித்தன.) இவற்றைத் தொடர்ந்து காரல் மார்க்ஸ் - ஏங்கெல்சின் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, காரல் மார்க்சின் மூலதனம் (மூன்று பகுதிகள்), உபரி மதிப்பு என்ற நான்காவது பகுதி, தத்துவத்தின் வறுமை, பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள், ஏங்கெல்சின் குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம், அவருடைய இயற்கையின் இயக்கவியல், டூரிங்கிற்கு மறுப்பு’ என்று ஒவ்வொன்றாக நூல்கள் வெளியிடப்படலாயின. இந்த நூல்கள் ஆங்கிலத்தில் மட்டுமல்ல, உலகின் ஏராளமான மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு, உலகில் மார்க்சியக் கருத்துக்கள் பரவ வழி செய்தன. இதைத் தொடர்ந்து, லெனின் எழுதிய நூல்கள், ஜே.வி. ஸ்டாலின் எழுதிய நூல்கள், சோவியத் தத்துவ அறிஞர் பிளக்கனோவ் எழுதிய நூல்கள் போன்றவை ஒவ்வொன்றாக வெளியிடப்பட ஆரம்பித்தன. அத்துடன் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் தொகுப்பு நூல்கள் வெளிவர ஆரம்பித்தன.
மூன்றே நூல்கள்
உலகில் மூன்று நூல்கள் மட்டும் உலகின் அனைத்து மொழிகளிலும் வெளிவந்துள்ளன என்றும் அவை முறையே பைபிள், திருக்குரான் மற்றும் மார்க்ஸ்- ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்றும் கூறப்படுகிறது. இரண்டாம் உலக யுத்தத்தின்பொழுது 1941 ஆம் ஆண்டிலிருந்து அது முடிவுற்ற 1945 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சோவியத் நாடு மாபெரும் தாக்குதல்களைத் தாங்க வேண்டியிருந்தது. பாசிஸ்ட் ஹிட்லரை எதிர்த்தப் போரில் இரண்டு கோடி சோவியத் மக்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து பெரும் சேதத்தை சந்தித்து வெற்றி பெற்றனர். இந்த ஆண்டுகளில் எவ்வித புத்தகங்களும் வர இயலவில்லை. யுத்தம் முடிவுற்று சோவியத் யூனியன் மகத்தான வெற்றி பெற்று அந்த நாடு புனரமைக்கப்பட்ட பின், இந்த புத்தகங்களை வெளியிடும் பணி மீண்டும் துவங்கியது. குறிப்பாக, 1960 ஆம் ஆண்டுகளில் மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் எழுத்துக்களைச் சேகரிக்கும் பணிக்காக, சோவியத் நாடு ஒரு ஏற்பாட்டைச் செய்தது. சோவியத் நாடு, இங்கிலாந்து மற்றும் கிழக்கு ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்த மார்க்சிய ஆய்வாளர்கள் குழு ஒன்றை அமைத்து, இந்த எழுத்துக்களைச் சேகரிக்கும் பணியை விரிவாகத் துவக்கியது. அந்தக் குழுவினர் ஐரோப்பாவின் பல நாடுகளுக்குச் சென்று அந்த நாட்டுப் பத்திரிகைகளில் மார்க்சும். ஏங்கெல்சும் எழுதியவற்றையும். அந்நாடுகளின் ஆவணக் காப்பகங்களில் இவ்விருவர் குறித்த விபரங்களையும், அவர்களின் கையெழுத்துப் பிரதிகளையும் சேகரித்தனர். அந்த அற்புதமான உழைப்பின் பயனாகத்தான் மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் தொகுப்பு நூல்கள் என்ற பெயரில் 40 தொகுப்புகள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டன. இவற்றின் மொத்தப் பக்கங்கள் சுமார் 31 ஆயிரம் ஆகும். இன்னும் சில ஆயிரம் பக்கங்கள் வர வேண்டியுள்ள நிலையில், சோவியத் நாடு பிளவுண்டு போயிற்று.
தமிழில் வந்த நூல்கள்
சோவியத் பதிப்பகங்கள் தமிழ் மொழியில் ஏராளமான நூல்களை வெளியிட்டுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, கூலி உழைப்பு மூலதனம், குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் , டூரிங்கிற்கு மறுப்பு, லூயி போனபார்ட்டின் 18 வது புரூமேர், ஜெர்மன் தத்துவம், மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் நினைவுக் குறிப்புகள், பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள், கம்யூனிஸ்ட் அகிலத்தின் சுருக்கமான வரலாறு, சோவியத் நாட்டில் இந்தியப் புரட்சியாளர்கள், மார்க்சிய அறிஞர் பிளக்கனோவ் எழுதிய வரலாற்றில் தனிநபர் பங்கு, வரலாற்றில் ஒருமைவாதம், மார்க்ஸ் , ஏங்கெல்ஸ், லெனின் தேர்வு நூல்கள் போன்ற எண்ணற்ற நூல்களை மிகமிகக் குறைந்த விலையில் வெளியிட்டு, தமிழகத்தில் மார்க்சியக் கருத்துக்கள் பரவ பெரும் உதவி புரிந்துள்ளன. அத்துடன் காந்தி , நேரு, பாட்ரிஸ் லுமும்பா, அலண்டே போன்ற பல தேச பக்தர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் இந்திய வரலாறு (இரண்டு பாகங்கள்) போன்ற நூல்களையும் மற்றும் ஏராளமான அறிவியல் நூல்களையும் மாஸ்கோ பதிப்பகங்கள் தமிழில் வெளியிட்டுள்ளன. அத்துடன் மாக்சிம் கார்க்கி உள்ளிட்ட இலக்கிய மேதைகளின் நூல்கள் பலவற்றையும் இந்த சோவியத் பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினால் துவங்கப்பட்ட நியூ செஞ்சுரி புத்தக நிலையம் தமிழில் மூலதனம் (மூன்று பாகங்கள்), மார்க்சிய மெய்ஞானம், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு, மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் எழுதிய நூல்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளது.இன்று, உலகின் ஐந்து கண்டங்களிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் மார்க்சிய இயக்கம் பரவி உள்ளது என்றால், உழைக்கும் மக்களின் வீரப் போராட்டங்கள் எழுச்சியுடன் நடைபெறுகிறது என்றால், சோவியத் நாடு பல மொழிகளில் கோடிக்கணக்கில் வெளியிட்ட மார்க்சிய நூல்களுக்கு கணிசமான பங்கு உண்டுஎன்பதில் ஐயம் ஏதுமில்லை. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோவியத் மக்களின் தன்னலமற்ற தியாகமும், அர்ப்பணிப்பும் இப்பெரும் பணியில் அடங்கியுள்ளன. அதன் பொருட்டு உலகக் கம்யூனிஸ்ட் இயக்கமும், உலகத் தொழிலாளி வர்க்க வர்க்கமும் மற்றும் உழைக்கும் மக்களும் மகத்தான ரஷ்யப் புரட்சிக்கும், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மற்றும் சோவியத் மக்களுக்கும் அளவிடற்கரிய அளவு நன்றிக்கடன்பட்டுள்ளனர்.      
தோழமையுடன்....   
Harikrishnan Sridharan 

No comments:

Post a Comment